திருக்குவளை: நாகை மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 18 பேரை நடுகடலில் கத்தி முனையில் மிரட்டி மீன் வலை, ஜிபிஎஸ், வாக்கி டாக்கி, மீன் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்து சென்ற சம்பவம் மீனவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த செருதூர் மீனவ கிராமத்திலிருந்து, 8 ஆம் தேதி ஏராளமான மீனவர்கள் பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்க பிடிக்க சென்றுள்ளனர். ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ராஜ்குமார் உள்ளிட்ட 5 நபர்கள் புதன்கிழணை இரவு கோடியக்கரையில் இருந்து தென்கிழக்கே 20 நாட்டிக்கல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது 2 பைபர் படகுகளில் அங்கு வந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ் பேசக்கூடிய 9 பேர், தங்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 200 கிலோ வலையை பறித்துச் சென்று விட்டதாக, வியாழக்கிழமை காலை கரை திரும்பிய மீனவர்கள் புகார் அளித்துள்ளனர்.
இதேபோன்று செல்லையன் செருதூர் என்பவருக்கு சொந்தமான பதிவெண் இல்லாத பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற செல்லையன் உள்ளிட்ட 5 பேரை, 3 பைபர் படகுகளில் வந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ் பேசக்கூடிய 9 பேர், தங்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 200 கிலோ வலை, ஜிபிஎஸ்-1, சுமார் 100 கிலோ மீன் , செல்போன் 3 ஆகியவற்றை பறித்துச் சென்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று மகேஸ்வரி செருதூர் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற செல்வம், தங்கவேல் உள்ளிட்ட 4 பேரிடம் படகுகில் வந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ் பேசக்கூடிய 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி திசை காட்டும் ஜிபிஎஸ் கருவி-1, சுமார் 120 கிலோ மீன், வெள்ளி அரைஞான் கயிறு ஆகியவற்றை பறித்துச் சென்றதாக கரை திரும்பிய மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.