ரத்தன் டாடா காலமானார்: தலைவர்கள் இரங்கல்

முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்:

இந்தியத் தொழில்துறையின் பெருந்தூணாகவும், பணிவு மற்றும் மனிதநேயத்தின் அடையாளமாகவும் திகழ்ந்த ரத்தன் டாடா மறைவையொட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.

இந்தியத் தொழில்துறையின் பெருந்தூணாகவும், பணிவு மற்றும் மனிதநேயத்தின் அடையாளமாகவும் திகழ்ந்த ரத்தன் டாடா மறைந்த செய்தி மிகவும் வேதனையளிக்கிறது.

அவரது தொலைநோக்குமிக்க தலைமை டாடா குழுமத்தின் வளர்ச்சியை வடிவமைத்ததோடு, அறத்துடன் கூடிய தொழில்புரிதலுக்கான அளவுகோலாகவும் உலக அளவில் விளங்கியது. நாட்டின் வளர்ச்சியிலும், புதுமையிலும், மனிதநேயச் செயல்பாடுகளிலும் திரு. ரத்தன் டாடா அவர்கள் காட்டிய இடையறாத அர்ப்பணிப்பினால் கோடிக்கணக்கானோரின் வாழ்வில் அழியாத் தடத்தினை அவர் பதித்துச் சென்றுள்ளார்.

இந்தியா ஒரு மாபெரும் ஆளுமையை இழந்துவிட்டது. எனினும் அவரது வாழ்வும் பணியும் அடுத்த பல தலைமுறைகளுக்கு ஊக்கமளித்துக் கொண்டே இருக்கும்.

இத்துயர்மிகு தருணத்தில்,அவரது குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் டாடா குழுமத்தைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

நமது தேசத்திற்கும் மக்களுக்கும் ரத்தன் டாவின் பங்களிப்புகள் அளவிட முடியாதது.

வணிக நடைமுறைகள் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு தலைமுறைகளை தாண்டி எதிரொலிக்கும். அவரது வாழ்க்கைப் பயணம் லட்சக்கணக்கானோருக்கு ஊக்கமளிக்கும்.

இந்த இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் டாடா குழுமத்தில் உள்ள அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது செயல்கள் என்றென்றும் நினைவுகூரப்படும்.

எடப்பாடி கே. பழனிசாமி இரங்கல்

எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், டாடா குழுமத்தின் கௌரவத் தலைவர் ரத்தன் டாடா காலமானார் என்ற செய்திகேட்டு மிகுந்த துயருற்றேன்.

தன்னுடைய தொழில் நேர்மையினாலும், வள்ளல் தன்மையாலும், சமூக சேவையாலும் பலருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த தொழிலதிபரான ரத்தன் டாடா மறைவு இந்திய நாட்டிற்கே பேரிழப்பாகும்.

மறைந்த ரத்தன் டாடா குடும்பத்தாருக்கும், டாடா நிறுவனத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். மறைந்த ரத்தன் டாடாவின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

மல்லிகாஜூன கார்கே

காங்கிரஸ் தலைவர் மல்லிகாஜூன கார்கே வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நாட்டின் விலைமதிப்பற்ற மகனை இழந்துவிட்டோம். நாட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான அவரது அர்ப்பணிப்பு மிகவும் முக்கியமானது, தெளிவான ஒருமைப்பாடு மற்றும் நெறிமுறை தலைமைக்கு ஒத்தவராக விளங்கியவர். லட்ச கணக்கான மக்களுக்கு ஒரு உத்வேகமாகவும் அடையாளமாகவும் விளங்கியவர் மற்றும் நாட்டை கட்டியெழுப்புவதில் பெரும் பங்களிப்பை வழங்கியவர் ரத்தன் டாடா. அவரது அன்புக்குரியவர்களுக்கு என அனுதாபங்கள்.

சுந்தர் பிச்சை இரங்கல்

கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கூகுளில் ரத்தன் டாடாவுடனான எனது கடைசிச் சந்திப்பில், வேமோவின் முன்னேற்றம் குறித்துப் பேசினோம், அவருடைய தொலைநோக்கு பார்வை என்னை கேட்கத் தூண்டியது. அவர் ஒரு அசாதாரண வணிகம் மற்றும் தீவிரமான தொண்டு கொள்கையையும், சிறந்த குணத்தையும் விட்டுச் செல்கிறார்.

இந்தியாவில் நவீன வணிகத் தலைமையை வழிநடத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் கருவியாக இருந்தவர். இந்தியாவை மேம்படுத்துவதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். அவரது அன்புக்குரியவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

பாரிவேந்தர்

இந்திய ஜநநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்த நூற்றாண்டின் தலைசிறந்த கொடை வள்ளல் ரத்தன் டாடா; அனைத்து துறைகளுக்கும் குறிப்பாக ஆட்டோமொபைல் துறைக்கு டாடாவின் மறைவு பேரிழப்பாகும். ரத்தன் டாடா குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் டாடா குழும ஊழியர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

கமல்ஹாசன்

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ரத்தன் டாடா என்னுடைய தனிப்பட்ட கதாநாயகன், என் வாழ்நாள் முழுவதும் நான் பின்பற்ற முயற்சித்த ஒருவர். நாட்டை கட்டியெழுப்புவதில் அவரது பங்களிப்புகள் என்றென்றும் நவீன இந்தியாவின் பொக்கிஷம்.

ரத்தன் டாடாவின் உண்மையான செல்வம் பொருள் செல்வத்தில் இல்லை மாறாக அவரது நேர்மை, தேசபக்தி,பணிவு மற்றும் நெறிமுறைகளில் உள்ளது.

அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், டாடா குழுமம் மற்றும் நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *