மும்பையில் 1937ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி பார்சி குடும்பத்தைச் சேர்ந்த நாவல் டாடா – சூனி தம்பதிக்கு பிறந்தார் ரத்தன் டாடா. ரத்தன் டாடாவுக்கு 10 வயதாகும்போதே, அவரது பெற்றோர் விவாகரத்துப் பெற்று பிரிந்துவிட்டனர்.
அதன்பிறகு, அவரது பாட்டி நவாஸ்பாய் டாடாவால் வளர்க்கப்பட்டார். அவருக்கு நாவல் டாடா – சிமோனி டாடாவின் மகனும், தனது ஒன்றுவிட்ட சகோதருமான நியோல் டாடாவின் ஆதரவும் கிடைத்தது.
இந்த நிலையில்தான், நாவல் டாடாவை தத்தெடுத்து வளர்த்த ஜேஆர்டி டாடாவின் தலைமையின் கீழ் இருந்த டாடா குழுமம் ரத்தன் டாடாவின் கைக்கு வருகிறது.
1991ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜேஆர்டி, டாடா குழுமத்தின் தலைவராக ரத்தன் டாடாவை நியமிக்கிறார். இதற்குக் காரணம், ஜேஆர்டி டாடாவுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவுதான். திடீரென இதய நோய் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜேஆர்டி, டாடா குழுமத்தை ரத்தன் டாடாவிடம் ஒப்படைக்க முடிவு செய்கிறார்.
இது குறித்து ரத்தன் டாடா கூறுகையில், இருவரும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தோம். திடீரென அவருக்கு உடல்நிலை பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். நான் தினமும் சென்று பார்த்து வந்தேன். பிறகு மருத்துவமனையிலிருந்து திரும்பியதும் அவரை பார்க்க அலுவலகம் சென்றேன்.