சென்னையில் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் அனைத்து நிறுவனங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், உள்ளூர் புகார் குழு அமைக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.
பெண்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி சார்ந்து பல்வேறு திட்டங்களையும், நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வருகிறது. அதற்கு, விடியல் பயணம், புதுமைப்பெண் ஆகிய திட்டங்கள் சான்றுகளாகவும் அமைந்துள்ளன.
இந்த நிலையில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே.
அந்த அறிக்கையில், சென்னை மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள், அரசு சாரா நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள். மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் போன்ற நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம் 2013 இன் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் உள்ள புகார் குழு (Internal Complaints Committee) அமைக்க வேண்டும். இந்த குழுவில் குறைந்தபட்சம் 5 உறுப்பினர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். அவற்றில் அதிகபட்சமாக (3) பெண் உறுப்பினர்கள் இருக்கவேண்டும்.
இந்த சட்டத்தின் கீழ் புகார் அளிக்க ஏதுவாக நிறுவனம் புகார்பெட்டி ஒன்றை அமைக்க வேண்டும். புகார்கள் பெறப்பட்டவுடன் உள்ளூர் புகார்குழு உறுப்பினர்களை கொண்டு விசாரணை மேற்கொள்ளப்படும்.