நீட் தேர்வை கொண்டு வந்த திமுகவே அதை ரத்து செய்வதாக இரட்டை வேடம் போடுவதாக குற்றச்சாட்டிள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, ஆட்சி பொறுப்பேற்று 41 மாதங்களாகியும் இதுவரை திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள குப்பதாசன் வளவு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார்-ஆனந்தி தம்பதியரின் மகள் புனிதா, அண்மையில் நடந்த அரசு பாரா மெடிக்கல் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்விலும் இடம் கிடைக்காத விரக்தியில் செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இந்த நிலையில், தற்கொலை செய்து கொண்ட மாணவி புனிதா வீட்டிற்கு வியாழக்கிழமை வந்த அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் மாணவியின் தாயாரிடம் அதிமுக சார்பில் கட்சி நிதியிலிருந்து ரூ. 2 லட்சத்தை வழங்கினார். அப்போது மாணவியின் தங்கை மற்றும் தாயாரிடம் மனம் தளராமல் இருக்குமாறு ஆறுதல் கூறினார்.